8.16.2005

தமிழகத்தில் ஒரு மழைக்காலம்!

இந்தியாவின் அனைத்து செய்தித்தாள்களிலும் இப்படி செய்திகள் அமைந்திருந்தது.

தமிழ் நாட்டில் கடும் மழை!

தமிழ் நாட்டில் காவிரி பிடிப்புள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் தமிழ் நாட்டின் அணைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநில விவாசியிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரியிலிருந்து தமிழ் நாடு தண்ணீர் திறக்கும் நாளை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடகம் மத்திய அரசை வலியுறுத்துகிறது!

தமிழ் நாட்டில் கடும் மழை பெய்து, அங்குள்ள அணைகளில் நீர் நிரம்ப ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ்நாடு கர்நாடகாவிற்குத் தரவேண்டிய 120 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என்று மத்திய அரசை கர்நாடக முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தேவகவுடாவின் ஜனதா தளம், மத்திய அரசு தமிழ் நாடு அரசை நிர்ப்பந்தப்படுத்தி தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார். கர்நாடக எல்லையில் அமைந்துள்ள மேட்டூர் அணை நிரம்பி வழிவதாக அவர் கூறினார். தமிழ் நாடு கர்நாடகாவுக்கு தண்ணீர் தர மறுத்தால், தமிழ் நாடு அரசைக் கலைக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. கர்நாடக மாநிலப் பிரிவு கூறியுள்ளது.

முல்லைச் சேட்டன் அணையில் 136 அடிக்குமேல் தண்ணீர் தேக்க அனுமதிக்க மாட்டோம்! தமிழ் நாடு அரசு அறிவிப்பு!!

கேரளாவுக்குச் சொந்தமான ‘முல்லைச் சேட்டன் அணை’ தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் கடும் மழை பெய்வதைத் தொடர்ந்து, இந்த அணை அதன் 150 அடி கொள்ளளவில் 136 அடிவரை நிரம்பியுள்ளது. 136 அடிக்கு மேல் நீர் தேக்க கேராளவை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ் நாடு நீர் வளத்துறை அமைச்சர் கூறினார். ஆனால் கேரளாவோ, கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததைத் தொடர்ந்து வரும் ஆண்டுக்கு 136 அடி போதாது. 145 அடி வரை நீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக கேரளாவில் இந்த அணையை ஒட்டியுள்ள மாவட்ட மக்கள் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

தமிழ் நாட்டிற்குப் போதிய தண்ணீர் இல்லை!

கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோருவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “தமிழ்நாட்டில் தற்போதுதான் அணைகள் நிரம்பி வருகின்றன. சென்னை முதல் கண்ணியா குமரி வரையுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள அணைகள் நிரம்பிய பின் கர்நாடகாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

நடிகர்கள் போராட்டம்!!

இதற்கிடையில் கர்நாடகாவுக்கு தமிழ் நாடு தண்ணீர் தரக் கூடாது என்று நடிகர்கள் போராட்டம் நடத்தினார்கள். தமிழ்த் திரை உலகின் தாத்தா தலைமையில் நடைபெற்ற இந்த பேராட்டத்தில் திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் பங்குபெற்றனர்.

இந்த பேராட்டத்தைப் பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடன் கன்னட பத்திரிக்கைகளில், கன்னட நடிகர்கள் ஏன் பேராடவில்லை என்று அவர்களைக் கண்டித்து செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, கன்னட திரை உலகின் அவசரக் கூட்டம் நேற்று மாலை பெங்களூரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழ் நாடு அரசின் நிலைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பெங்களூரில் உள்ள கனினி தொடர்பான வேலைகளில் தமிழர்களைச் சேர்க்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி, மென்பொருள் நகர் அருகே மாபெரும் கூட்டம் நடத்தினர். கன்னட உலகின் முடிசூடா மன்னன் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர் பெங்களூரில் உள்ள விதான் சபா அருகே அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் கன்னட திரை உலகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

குஜராத், பஞ்சாப், அஸ்ஸாம், மகாராஷ்டிரா (நிறைய சோகத்துடன்), கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற நாட்டின் அனைத்து பகுதியிலும் கடும் மழை - அதனால் வெள்ளப் பெருக்கு, உயிர் சேதம் என்று செய்திகள் வரும்போது தமிழ் நாட்டில் மட்டும் (மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி தவிர்த்து) வெய்யிலின் கொடுமை இன்னும் தனியாத நேரத்தில் இன்று, சுமார் 4.45 மணிக்கு சென்னை மாநகர் இலேசாகக் குளிர்ந்த போது (ஆமாங்க! மெய்யலுமே மழைதான்! சுமார் முப்பது நிமிடங்கள் மட்டுமே!!) என் மனதில் ஏற்பட்ட சுவையான கற்பனைகள் இவை. செய்தியின் சுவராஸ்யத்திற்காக மட்டுமே நடிகர்களை இதில் சம்பந்தப்படுத்தி உள்ளேன். என் முந்தைய பதிவுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

2 comments:

Anonymous said...

"தமிழகத்தில் ஒரு மழைக்காலம்!" -
கறிக்கு உதவாத வெங்காயம்

Anonymous said...

Nalla karpanai.... sirukathai pottikku oru kathai eluthalmey..