8.15.2005

அனுமந்தபுரம் வீரபத்திரர்

சிவனின் அவதாரங்களில் ஒன்றான அகோர வீரபத்திரர் காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரத்தில் சுயம்புமூர்த்தியாக தனிக்கோயிலில் இருக்கிறார். 2ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இத்தலம்.

வீரபத்திரர் தோற்றம்: சந்திரன் தன் மனைவியரைக் கவனிக்காத காரணத்தால் பெற்ற சாபத்தினால் தனது தொழிலை சரிவர செய்ய இயலாமல் போனது. இதையறிந்த தேவர்கள் சிவனிடம் வேண்டி மீண்டும் சந்திரனின் இயக்கம் நடைபெற அருள்பெற்றார்கள். இதனால் கோபம் கொண்ட சந்திரனின் மாமனார் தட்சன் சிவனை அவமதித்தான்.
புலஹ முனிவர் தட்சனை சாந்தம் செய்தார். இருந்தும் தட்சன் திருந்தவில்லை. எனவே முனிவர் தட்சனின் யாகம் அழியட்டும் என சாபம் கொடுத்து சென்றார்.

தட்சன் விஷ்ணுவை முன் நிறுத்தி யாகத்தை தொடங்கினான். இதனால் பல துர்சகுனங்கள் தோன்றின. வருத்தமடைந்த நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் நடந்தவைகளைக் கூறினார். சிவனும் தட்சனிடம் அவிர்பாகம் பெற்று வர நந்தியை அனுப்பினார். தட்சன் நந்தியை அவமானப்படுத்த, அவரும் தட்சனுக்கு சாபம் கொடுத்து கைலாயம் திரும்பினார்.
இப்படியே அனைவரும் சாபம் கொடுத்தால் தன் தந்தையின் நிலைமை என்னாவது? என்று தவித்த பார்வதி தன் கணவன் பரமேஸ்வரனிடம், தட்சனிடம் தான் சென்று அவிர்பாகம் பெற்று வர சம்மதம் கேட்டாள். சிவன் தடுத்தும் கேளாமல் தான் மட்டும் வந்து அவிர்பாகம் கேட்டு அவமானப்பட்டாள். தந்தையென்றும் பாராமல் தட்சனுக்கு சாபம் கொடுத்து விட்டாள்.

கயிலை திரும்பிய மனைவியிடம் கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். பார்வதியும் ருத்ர தாண்டவம் ஆடினாள். சிவனிடம் இருந்து வெளிப்பட்ட வியர்வை நீர் கொதித்து அதிலிருந்து "அகோர வீரபத்திரர்' தோன்றினார். பார்வதியின் தாண்டவத்தில் கால் சிலம்பு உடைந்து ரத்தினங்கள் சிதறி பத்ரகாளி 9 வடிவில் தோன்றினாள்.
அகோர வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபார்வதியை வணங்கினார்கள். சிவபெருமான் இவர்களிடம், ""நீங்கள் இருவரும் தட்சனிடம் அவிர்ப்பாகம் கேளுங்கள். தராவிட்டால் அவனை அழித்துவிடுங்கள்,'' என உத்தரவிட்டார்.

சிவனின் உத்தரவின்படி வீரபத்திரர் தட்சனிடம் அவிர்பாகம் கேட்டார். தட்சன் வீரபத்திரரை அவமானப்படுத்தி விட்டான். பிரம்மனிடமும், விஷ்ணுவிடமும் வீரபத்திரர் நியாயம் கேட்க, அவர்கள் தட்சனுக்கு பயந்து அமைதியாக இருந்தனர்.

கோபம் கொண்ட வீரபத்திரர் அங்கிருந்த ஆண்கள் அனைவரையும் தாக்க, பத்ரகாளி பெண்களை தாக்கினாள். தட்சனோ சாகாவரம் பெற்றவன். வீரபத்திரர் அவனது தலையை வெட்டவும், தலை தனியாக யாகத்தில் போய் விழுந்தது. தட்சனின் தந்தையாகிய பிரம்மனின் வேண்டுதலால் அருகிலிருந்த ஆட்டின் தலையை வைத்து தட்சனை உயிர்ப்பித்தார். அப்படியிருந்தும் வீரபத்திரரின் கோபம் தணியவில்லை.

சிவனிடம் இனி தன் கோபம் தீர வழி கேட்க, ""தெற்கேயுள்ள அனுமந்தபுரத்தில் வெற்றிலை தோட்டம் உள்ளது. அங்கு அமர்ந்தால் உன் கோபம் தணிந்து விடும்,'' என்று கூறினார். தட்சனும் வீரபத்திரருடன் செல்வதாக சிவனிடம் கூறினான். வீரபத்திரரும் இங்கு வந்து சாந்த சொரூபியாக அமர்ந்தார். அப்போது இங்கு தங்கியிருந்த துர்தேவதைகள் ஓடின.

நன்றி: தினமலர்

1 comment:

வெங்காயம் said...

Aarokkiyam உள்ளவன் said...
//இதுதான் 'ஊடு கட்டி' அடிப்பது என்று சொல்வது?//

ஆரோக்கியம் உள்ளவன் அதை நீங்கள் எப்படி வேண்டுமானலும் சொல்லிக் கொள்ளலாம்.

a-a,

புராணக்கதைகள் குறித்த என் பதிவுகளில் என்னுடைய சொந்தக் கருத்துக்களை இடுவதில்லை... தினமலர் இதழின் இணைப்பிலிருந்தே எழுதியுள்ளேன். இந்தக் கதைகள் நம்பத்தகுந்தவை அல்ல. இதுபோன்று ஏராளமான அறிவுக்கு எட்டாத கதைகள் காப்பியம் என்றும் புராணம் என்றும் கூறி, மனித அறிவை மழுங்கச் செய்யும் கருத்துக்கள் பிராமனீய சித்தாந்த்தில் உள்ளன. எனவேதான் பெரியாரின் வழியே சிறந்தது என்று உணர்ந்து அதைப் பின்பற்றி வருகிறேன். நான் இந்து மதத்திலிருந்து வெளியானதற்கான காரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

மற்றபடி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் கூறிய திருத்தங்களை தினமலருக்கு அனுப்பி வைக்கலாமே....